உங்க குழந்தை இரவில் படுக்கையில் உச்சா போகுதா?
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை, குறைந்தது மாதம் 2 முறை கட்டுப்பாடில்லாமல் உறங்கும் போது சிறுநீர் கழிப்பதை, 'நாக்டர்னல் எனுரிசிஸ்' என்கிறோம்.
இது குழந்தை வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். ஆனால், தொடர்ந்து நீடித்தால், பரிசோதனை, சிகிச்சை அவசியம்.
சிறுநீர் பாதையை கட்டுப்படுத்தும் நரம்புகள், முழுமையாக வளராமல் இருப்பதாலும், சிறுநீரகம் வேலைத்திறன் குறைவாக வேலை செய்து, இரவில் அதிகமாக சிறுநீர் உருவாகலாம்.
தவிர, ஹார்மோன் குறைபாடு, மரபியல் பிரச்னை, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பையில் தொற்று காரணத்தாலும் இப்பாதிப்பு இருக்கும்.
குடும்பத்தில் தகராறு, பள்ளி அழுத்தம், தம்பி மற்றும் தங்கை பிறப்பால் ஏக்கம் போன்றவற்றால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளாலும் சிறுநீர் கழிக்கலாம்.
பாதிப்புள்ள குழந்தைகளை பெற்றோர் திட்டவோ, அடிக்கவோ கூடாது. 10 வயதுக்கு மேல், இப்பாதிப்பால் வெட்கம், உளவியல் பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே, நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில், கேலி, கிண்டல் செய்யக்கூடாது.
இரவு நேரங்களில் அதிக தண்ணீர், பானங்கள் குடிக்காமல் இருக்கவும், உறக்கத்திற்கு முன், உறங்கிய சிறிது நேரத்திற்கு பின், சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும்.
உலகளவில் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளில், 15 முதல் 20 %மும், 10 வயது ஆன பின்னரும், 5 முதல் 10 % இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
இது குழந்தைகளின் தவறு என எண்ணுவதும், ஒழுக்கமின்றி இருப்பதாகவும் நினைப்பது தவறு.