ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த அபூர்வ நடிகை 'ஆச்சி' மனோரமா
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சாதனை நாயகி, 'பொம்பள சிவாஜி' என கலையுலகினரால் பாராட்டுப் பெற்ற 'ஆச்சி' மனோரமா அவர்களின் 84வது பிறந்த தினம் இன்று.
'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் மனோரமா 12வது வயதிலேயே ஒரு நாடக கலைஞராக தனது கலைப்பணியை துவக்கினார்.
இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்த நாடக இயக்குனர் திருவேங்கடம் மற்றும் ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர், கோபிசாந்தா என்ற இவரது இயற்பெயரை 'மனோரமா' என மாற்றினர்.
கவியரசர் கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தில் வெள்ளித்திரையில் ஒரு நடிகையாக அறிமுகமானார் மனோரமா.
மனோரமா கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் 1963ல் வெளிவந்த 'கொஞ்சும் குமரி'. நாயகனாக ஆர்.எஸ். மனோகர் நடித்திருந்தார்.
1964ல் வெளிவந்த 'மகளே உன் சமத்து' என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமானார் மனோரமா. ஏறக்குறைய 300 பாடல்கள் பாடியிருக்கிறார்.
எம்ஜிஆர், சிவாஜி எனத் துவங்கி, அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப்பணி ஆற்றி தமிழ் திரையுலகில் கோலோச்சியவர் இந்த ஆச்சி.
அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் என்.டி.ஆர்., என ஐந்து முதல்வர்களோடு கலைப்பணியாற்றிய பெருமைக்குரியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.
'பத்மஸ்ரீ விருது' உட்பட துணை நடிகைக்கான தேசிய விருது, கலைமாமணி, என்.எஸ்.கே., விருது, அண்ணா விருது, எம்.ஜி.ஆர்., விருது, உட்பட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார்.
ஏராளமான மக்களின் மனங்களை வென்றெடுத்த இந்த பன்முகத் தன்மை கொண்ட பழம்பெரும் நாயகியின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து அகம் மகிழ்வோம். .