மக்கள் தொகை கணக்கெடுப்பு... 16 மொழிகளில் சுய விபரங்களை ஆன்லைனில் பதியலாம் !
நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2011ல், கணக்கெடுப்பு பணிகள் நடந்தன.
பின், 2021ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக தடைபட்ட நிலையில், 2027ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென மத்திய அரசு அறிவித்தது.
இது, வீட்டு கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என, 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்டமாக, வீடுகள் கணக்கெடுப்பு பணிகள், வரும் ஆக., 1 - 31ம் தேதி வரை நடக்கிறது.
அதற்கு முன், ஜூலை 17 - 31ம் தேதி வரை, பொது மக்கள் அனைவரும், 'ஆன்லைன்' வழியே சுய விபரங்களை பதிவு செய்யலாம்.
இந்த வீடுகள் கணக்கெடுப்பு பணியின்போது, மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்.
பொது மக்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உட்பட 16 மொழிகளில், தங்களுக்கு விருப்பமான மொழிகளில், சுய விபரங்களை பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுய விபரங்களை பதிவு செய்யும்போது, முதலில் பதிவு செய்யும் மொழி; குடும்பத் தலைவரின் பெயர்; தொலைபேசி எண்; ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
ஒரு முறை பதிவு செய்த பின், அவற்றை மாற்ற இயலாது. சேகரிக்கப்படும் தனிமனித விபரங்கள், முறையாக பாதுகாக்கப்படும்.