இன்று இந்திய கடற்படை தினம்!

இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. இந்தியாவின் எல்லைக்கோடு பெரும்பாலும் கடற்கரையை கொண்டு தான் உள்ளது.

கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ.,. இதனால் கடலோர பாதுகாப்பு என்பது முக்கியமானது.

நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், முப்படைகளுள் ஒன்றான கப்பற்படை, முக்கிய பங்கு வகுக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையாகவும் திகழ்கிறது. 1947 முதல் செயல்படுகிறது.

1971ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின் போது, பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது இந்திய கடற்படை தாக்குதலை நடத்தியது.

'ஆப்பரேஷன் டிரைடன்ட்' என்ற பெயரில் டிச., 4ம் தேதி தொடங்கப்பட்ட இந்த போரில் இந்திய கடற்படை சிறப்பாக செயல்பட்டது. இதன் விளைவாக வெற்றியும் பெற்றது.

இதனை நினைவுபடுத்தும் விதமாக இந்திய கடற்படை சார்பில் ஆண்டுதோறும் டிச.,4ம் தேதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பு துறையில் வீரத்துடன் போரிட்டு, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு 'பரம் வீர் சக்ரா', 'மகா வீர் சக்ரா' மற்றும் 'வீர் சக்ரா' ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.

கடற்படையில் இளைஞர்கள் அதிகளவில் சேர முன்வர வேண்டும். இதற்கான முயற்சிகளில் கடற்படை ஈடுபட வேண்டும். மேலும் கடலோர பாதுகாப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.