நீரிழிவு பாதிப்பு... இந்தியாவுக்கு 2ம் இடம்

லண்டனின், 'தி லான்செட் டயபாடீஸ் அண்ட் எண்டோகிரைனாலஜி', மருத்துவ இதழ் 2024ல் உலகளவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வறிகையை வெளியிட்டுள்ளது.

கடந்த 2005 -2024 வரையிலான காலங்களில் பதிவான விபரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மொத்தம் 215 நாடுகளின் தரவுகளை ஆராய்ந்து, 246 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலுள்ளது. 2024ல், அங்கு 14.8 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர்.

9 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், 3.9 கோடி பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், உலகளவில் நீரிழிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

வரும் 2050ம் ஆண்டிற்குள், அமெரிக்காவை பாகிஸ்தான் மிஞ்சிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

2024ல், 11 %க்கும் அதிகமானோர், அதாவது 20 -79 வரையிலான வயதுக்கு உட்பட்ட 58.9 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர். வரும் 2050ல், இது, 13 % ஆக அதிகரிக்கும்.

கடந்த 2024ல், உலகளவில் ஒன்பது பேரில் ஒருவர் பாதிப்புடன் வாழ்ந்து வந்துள்ளார்; பாதிக்கப்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது.

2050க்குள் இது, 90 கோடியாக உயருமென கூறப்பட்டுள்ளது.