ஆட்டிசம் ஏற்படுத்துமா பிளாஸ்டிக்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நெகிழிப் (பிளாஸ்டிக்) பயன்பாடு சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் கேடானது என்பதை அறிவோம். ஆனால், நாம் நினைத்ததை விட பிளாஸ்டிக் மோசமானது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிஸ்பினால் ஏ (Bisphenol A - BPA) எனும் வேதிப் பொருளால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் முதல் உணவுப் பொருட்களை பேக் செய்யும் கவர்கள் வரை அனைத்திலும் இந்த பி.பி.ஏ., உள்ளது இதனால் எளிதாக நம் உடலில் சேர்ந்துவிடுகிறது.
இதன் வடிவமும், செயல்பாடும் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் நாளமில்லா சுரப்பியை ஒத்து இருக்கும். எனவே, நம் உடலில் பல பிரச்னைகள் வருகின்றன.
குறிப்பாக கர்ப்பிணிகளின் உடலில் இது இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் (Autism spectrum disorder - ASD) வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஏ.எஸ்.டி. நூற்றில் ஒரு குழந்தையைப் பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இந்த பாதிப்புள்ள குழந்தைகளால் பிற குழந்தைகள் போல் தெளிவாகப் பேச, கற்க, செயல்பட இயலாது. இது ஏற்பட பொதுவாக மரபியல், சிறுவயதில் வளரும் சூழல் இவை தான் காரணம்.
கருவில் ஆண்குழந்தை உருவாகும்போது அதன் மூளையில் அரோமடேஸ் எனும் நொதியின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த பி.பி.ஏ. சுரப்பிற்கு இடையூறு செய்வதால், மன வளர்ச்சியைப் பாதிக்கிறது.
எனவே, இந்த வேதிப்பொருள் நம் உடலில் சேராமல் இருக்க பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆய்வாளர்களின் அட்வைஸாகும்.