தொடர்ந்து ஹெல்மெட் அணிவதால் கூந்தல் உதிருமா?
தற்போதைய நாகரிக உலகில் வெயில், மழை பாராமல் பலரும் இருசக்கர வாகனத்தில் மணிக்கணக்காக பயணிக்கும்போது, நீண்ட நேரத்துக்கு ஹெல்மெட் அணிய வேண்டியுள்ளது.
ஹெல்மெட் உயிரைக் காக்கும் என்றாலும், இதனால் தலையில் ஏற்படும் கனம், கேசத்தில் உண்டாகும் வியர்வை போன்றவை வாகன ஓட்டிகளை வெகுவாக பாதிக்கிறது.
30 வயதைக் கடந்த இளைஞர்களுக்கு கேசத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறையத் துவங்குவதால், பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அதேவேளையில், ஹெல்மெட் அணிவதால் நாளடைவில் கூந்தலில் அடர்த்தி குறையுமா என பலருக்கு சந்தேகம் எழும். இதற்கு மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.
ஹெல்மெட்டின் உள்ளே உள்ள குஷன் கூந்தலை சில மணி நேரங்கள் அழுத்திப் பிடிக்கும். இதனால், உதிரக்கூடும் என்பதற்கு எந்த நிரூபணமும் கிடையாது.
பெண்கள் அழுத்தி வாரி, பின்னலிடுவது, கொண்டை போடுவது போன்றவற்றை செய்யும்போது கூட கூந்தல் அழுத்தப்படுகிறது. ஆனால் இதனால் கொட்ட வாய்ப்பில்லை.
வெயிலில் பலமணி நேரம் ஹெல்மெட் அணிந்து லாங் ரைட் செல்பவர்கள், அவ்வப்போது அதை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் வியர்வை தங்காமல் உலர்த்துவது நல்லது.
தினமும் ஒரு மணிநேர அலுவலகப் பயணம் செய்பவர்கள் இப்படி செய்யத் தேவையில்லை. கேசத்தின் வேர்க்கால்களை வியர்வை பாதிப்பதால் மிகத் தாமதமாக உதிர்வு உண்டாக வாய்ப்புள்ளது.