பள்ளி செல்லும் முன்பே மாணவரிடம் சுமைகளை திணிக்காதீர்

10ம் வகுப்பு, பிளஸ் 2 செல்லும் உங்கள் குழந்தைகளிடம், அதிக மார்க் வாங்கினால் தான் அடுத்து இந்த கோர்ஸ் படிக்க முடியும்; வேலை வாங்க முடியுமென கல்வியாண்டு துவக்கத்திலேயே சுமையை திணிக்காதீர்.

'இனிமேல், மொபைல் போன் தொடவே கூடாது; டிவி கட் தான்; கேபிள் கிடையாது' என, கட்டுப்பாடுகளையும் துவக்கத்திலேயே கடுமையாக்காதீர்.

முதல் 1 மாதம் பள்ளிக்கு சென்ற பின், 'ஆசிரியர் எப்படி, காலாண்டுத்தேர்வில் அதிக மார்க் வாங்கினால், உனக்கு நீ எதிர்பார்க்கும் பரிசு காத்திருக்கு' என ஊக்கப்படுத்துங்கள்.

அப்போது தான், அரையாண்டில் கூடுதல் மார்க் வாங்க முயற்சிப்பர். படிப்பதற்கு நேரம் வரையறை செய்வதை போல், பிற பொழுது போக்குக்கும் அவர்களிடம் ஆலோசித்து நேரம் ஒதுக்குங்கள்.

'பொதுத்தேர்வு கடினம்; படிப்பது சிரமம்' என சொல்லாமல், புரியும் வகையில் எடுத்துக் கூறுங்கள். அப்போது தான் அவர்களும் பொறுப்புகளை உணர்வர்.

ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளியில் சேரும்போது, வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர், சக மாணவர்கள் எப்படி என்பதை பெற்றோர் கேட்டு தெரிந்து கொண்டு வழிகாட்ட வேண்டும்.

முதன்முறை குட்டீஸ்களை பள்ளிக்கு அனுப்பிகிறீர்கள் என்றால், 'உன்னை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுருவேன்' என மிரட்டாதீர்கள்; இப்போதிருந்தே மனதுக்குள் ஒரு பயம் வந்து விடும்.

'நீ போற ஸ்கூல்ல துாரி, சறுக்கல் எல்லாம் இருக்கும்; ஜாலியா விளையாடலாம். புதுசா பிரண்ட்ஸ் வருவாங்க' என, சொல்லிப் பழக்குங்கள்.

பிரிகேஜி., எல்.கே.ஜி., செல்லும் குழந்தைகள் அதிகமாக பெற்றோர், உறவுகளை விட்டு பிரிந்து இருந்திருக்க மாட்டார்கள். எனவே, முடிந்தளவு மதிய வேளையில் சந்திக்க முயற்சிக்கலாம்.