நாய்களுடன் வேண்டாமே அதிக நெருக்கம்!
சல்மோனெல்லோசிஸ் (Salmonellosis) என்ற நோயை சல்மோனெல்லா பாக்டீரியா கிருமி ஏற்படுத்துகிறது. இக்கிருமி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்.
பச்சையான அல்லது சரியாக சமைக்கப்படாத முட்டை, இறைச்சி, சரியாகக் காய்ச்சப்படாத பால் இவற்றை உண்பதால் மட்டுமே இக்கிருமி நம் உடலுக்குள் செல்லும் என கருதப்பட்டது.
ஆனால், அமெரிக்கா பல்கலையின் சமீபத்திய ஆய்வில், சல்மோனெல்லா பாக்டீரியா என்ற நோய், வீட்டில் வளரும் நாய்களிடமிருந்தும் மனிதர்களுக்குப் பரவுமென கண்டறியப்பட்டுள்ளது.
சிலர் வீட்டுக்கு காவலிருக்கும் நாயை வாசலில் மட்டுமே கட்டி வைத்திருப்பர். ஒருசிலர் தங்கள் வீட்டின் எல்லா பகுதிகளிலும் நாயை அனுமதிப்பர்.
நாய்களை தொட்ட பின் கைகளைக் கழுவாமல் இருந்தாலும் அவற்றிலிருக்கும் கிருமி நமக்கும் பரவ வாய்ப்புள்ளது.
அந்த பாக்டீரியா உடலுக்குள் நுழைந்தால், முதலில் குடல் சுவரைத் தாக்கும். நாம் உட்கொள்ளும் நீரையும், உணவிலுள்ள திரவப் பொருட்களையும் குடலால் உறிஞ்ச முடியாது.
இதனால் வாந்தி, தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். நாய்களோடு அதிக நெருக்கமாகப் பழகியவர்களுக்கு தொற்று எளிதாக ஏற்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்புக்குரிய விலங்குகளாக இருப்பினும், நாய்களுடன் விளையாடிய பின் நம் உடலைச் சுத்தப்படுத்தினால் மட்டுமே இந்நோயிலிருந்து தப்ப முடியுமென ஆய்வாளர்கள் வலியுறுத்தயுள்ளனர்.