முதியோரை பாடாய்படுத்தும் ஹைப்போகாண்ட்ரியாசிஸ்

முதுமை வயதை எட்டுபவர்களுக்கு, உடலில் சில மாற்றங்கள், தடுமாற்றங்கள், குறைபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்று.

ஆனால், சமீபகாலமாக நோய் ஏதும் இல்லாமலேயே நமக்கு நோய் ஏற்பட்டு விடுமோ என்று முதியோர்கள் அச்சப்படுகின்றனர். இதை, 'ஹைப்போகாண்ட்ரியாசிஸ்' என்பர்.

இப்பாதிப்பு உள்ளவர்கள், சாதாரண வலிகளை கூட, பெரிய வியாதிகள் வந்துவிட்டது போன்று பதட்டம் அடைவர். தலைவலிக்கு கூட மருத்துவர்களை பார்க்க முயற்சிப்பர்.

பரிசோதனை முடிவுகளில் ஒன்றும் இல்லை என்று வந்தாலும், சமாதானம் ஆகாமல் மீண்டும், மீண்டும் மன அழுத்தத்திற்கு சென்றுவிடுவார்கள்.

தொடர்ந்து உடல் பாதிப்பு சார்ந்து பேசுவர்; அது சார்ந்த தகவல்களை தேடுவர்; இறந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதை அச்சத்தில் தவிர்ப்பர்.

இறந்து விடுவோம் என அடிக்கடி பேசுவது, அடிக்கடி டாக்டர்களை சந்தித்து பேசுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

சுற்றுப்புற சூழல், பரம்பரை, சிறு வயதில் எதிர்கொண்ட உடல் நல பிரச்னைகள், அல்லது நெருங்கிய உறவினர்கள் உடல் நல பாதிப்பால் இறப்பது போன்றவை காரணமாக இருக்கலாம்.

இதற்கு மருத்துவ ரீதியாகவும், மனநலம் சார்ந்தும் சிகிச்சைகள் உள்ளன. யோகா, தியானம் போன்றவை கைகொடுக்கும்.

அதிக நேரம் அவர்களுடன் செலவிடுவதும்; அவர்களின் குறைபாடுகளை பற்றி பேசாமல், பழைய, அழகிய நினைவுகள் குறித்து பேச வேண்டும்.

மேலும், என்னவானாலும் உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதும், சிகிச்சைக்கு முறையாக டாக்டர்களிடம் அழைத்து செல்வதும் அவசியம்.