ஆட்டிசத்துக்கு வழிவகுக்கும் தாயின் உடல் பருமன்... ஆய்வில் தகவல்

உலகளவில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (Autism Spectrum Disorder) அதாவது ஆட்டிசம் என அனைவராலும் அறியப்படும் இந்த நோய் எப்பொழுதும் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது.

சில நேரங்களில் இந்த நோயின் அறிகுறிகள் குழந்தை பிறந்த முதல் 12 மாதத்திலேயே தெரியும். மேலும் சில நேரங்களில் 24 மாதங்கள் வரை எந்த அறிகுறியும் புலப்படாமல் கூட போகலாம்.

பிறவியிலேயே ஏற்படும் இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளால், பிறரிடம் சகஜமாக பழக இயலாது. அவர்களது நடத்தை வயதுடன் பொருந்தாமல் சிறு பிள்ளையை போல இருக்கும்.

பொதுவாக இது மரபியல் மாற்றத்தால் ஏற்படுகிறது. பெண் பிள்ளைகளை விட ஆண் குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோயின் பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பெற்றோர் வயது, முந்தைய கர்ப்ப காலத்துக்கான குறுகிய இடைவெளி, கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் உடல் பருமன் மற்றும் வைரஸ் தொற்றுகள் இதற்கு காரணமாகும்.

பிரசவத்திற்கு முன் தாய்க்கு உள்ள உடல் பருமன், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளையைப் பாதிக்கும், ஆட்டிஸத்தைக் கூட ஏற்படுத்துமென அமெரிக்கா ஹவாய் பல்கலை ஆய்வு சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.

இதை 100 % குணப்படுத்த இயலாது. அதேநேரத்தில், துவக்கத்திலேயே பிஹேவியரல் மற்றும் ஸ்பீச் தெரபி போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது, பாதிப்பின் அளவை குறைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு, சரியான உடல் எடையை பராமரித்தல், டாக்டர் ஆலோசனையை பின்பற்றுதல் போன்றவற்றை மேற்கொள்வதால் ஆட்டிசம் அபாயத்தை வெகுவாக குறைக்கலாம்.