நீராகாரம்... சம்மரில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு இது
முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் அப்படியேவோ அல்லது தயிர், மோருடனோ கரைத்து குடித்தால் உடல் உஷ்ணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
ஏழைகளின் உணவு, பழஞ்சோறு, நீராகாரம், ஐஸ் பிரியாணி என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த பழைய சோறு வெயிலுக்கு ஏற்றது. குறிப்பாக மண்சட்டியில் இருப்பது தனி சுவையை அளிக்கும்.
'புரோ பயாடிக்' எனும் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இதில் பெருமளவு இருக்கின்றன.
இந்த பாக்டீரியாக்கள், வைட்டமின்கள், குறிப்பாக, பி1, பி12, பி6 உற்பத்தியை அதிகரிக்கின்றன. குடலின் உட்புறமுள்ள கொழகொழப்பான மியுக்கஸ் எனப்படும் சவ்வின் திறனை மேம்படுத்துகின்றன.
100 கிராம் வடித்த சாதத்தில், 3.5 மி.கிராம் இரும்பு சத்து இருக்கும். அதே சாதத்தை பழையதாக 12 மணி நேரம் ஊற வைத்து சாப்பிடும் போது, 73.9 மி.கிராமாக அதிகரிக்கிறது.
பழைய சோறிலுள்ள 'லாக்டோ பேசிலஸ்' எனும் பாக்டீரியாக்கள் குடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, நல்ல செரிமான சக்தியை தருகிறது.
கால்சியம் சத்து, இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான மெக்னீசியம், செலீனியம், பொட்டாசியம் அதிகமுள்ளன.
வயிற்றுப் புண், அழற்சி, உணவு சாப்பிட்டதும் மலம் கழிக்க வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், தொடர்ந்து பழைய சாதம் சாப்பிட்டதில், பிரச்னையின் தன்மை வெகுவாக குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.