நீண்ட நேரம் பயன்பாட்டுக்கு அறிமுகமாகும் புது சானிடைசர்

கொரோனோ பரவிய காலங்களில் இருந்து நம்மிடையே சானிடைசர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போதுள்ளவை பலவும் எத்தனால் கொண்டு தயாரிக்கப்படுபவை.

இவை உடனடியாகக் கிருமிகளைக் கொல்லும். ஆனால் நம் கைகளில் வெகுநேரம் தங்காது, ஆவியாகி விடும். அதிகபட்சமாக 1 மணி நேரம் மட்டும் ஆற்றல் இருக்கும்.

1 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் பயன்படுத்துவது என்பது இயலாத காரியம்.

அதனால் தான் நீண்ட நேரம் நமது தோலில் தங்கியிருக்கும் சானிடைசர்களை உருவாக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை நைட்ரிக் ஆக்ஸைட் மூலக்கூறுகள்.

அமெரிக்காவிலுள்ள ஜியார்ஜியா பல்கலை இந்த மூலக்கூறுகளைக் கலந்து புதிய சானிடைசரை உருவாக்கியுள்ளது.

இதற்கு நைட்ரிக் ஆக்ஸைட் வெளியிடும் ஜெல் அதாவது NORel (Nitric Oxide Releasing gel) என பெயரிட்டுள்ளது.

முயல் தோல் மீது சோதித்துப் பார்த்ததில் இந்த ஜெல் 97 சதவீத கிருமிகளை அழித்தது. 2 மணி நேரம் வரை இது தோலில் தங்கி கிருமிகளைக் கொன்றது.

ஜெல் நமது தோலில் தங்கியிருக்கும் நேரத்தை இன்னும் அதிகமாக்க க்ளிசரின், எத்தனால் முதலியவற்றைக் கலந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.