ஆரோக்கியம் தரும் ஆயில் புல்லிங்
உடலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்ற ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுவது ஆயில் புல்லிங். அதாவது வாயில் எண்ணெய் விட்டு கொப்பளிப்பது.
நம் பாரம்பரிய மருத்துவத்தில் இது பழங்கால முறை. உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்குவதோடு, வாய் சுகாதாரத்திற்கும் இம்முறை உதவும்.
இதை தினசரி செய்யும் போது, ஒட்டு மொத்த தசைகள், நரம்புகள் வலிமையடைவதுடன், வாய் பகுதியிலுள்ள நரம்புகள், தசைகள் வலிமை பெறும்.
இத்துடன் கண்களுக்கும் நல்லது; காதுகள், தொண்டை, பற்கள், ஈறுகள், சுவாச மண்டலத்தின் சில பகுதிகள், செரிமான மண்டலம் ஆகியவை ஆரோக்கியம் பெறும்.
கொப்பளித்தல் செய்ய, ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெய் மட்டுமே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும்; தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெயாக இருப்பது அவசியம். காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், பல் துலக்கும் முன் எண்ணெயை கொப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவில் துாங்கும் முன் செய்யலாம்.
அதிகபட்சமாக 1 டே.ஸ்பூன் எண்ணெய் எடுத்து, வாய் முழுக்க பரவுமாறு தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். சில நிமிடங்களுக்கு பின் நீர்த்துப் போகும்; துப்பி விட்டு, நீரில் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
கொப்பளிக்க வாயில் ஊற்றிய எண்ணெயை விழுங்கி விடாமல் கவனமான இருக்க வேண்டும்.