சமையலை கமகமக்க செய்யும் குழம்பு வடகம்!

தேவையானவை: பெரிய வெங்காயம் - 2 கிலோ, முழு பூண்டு - மூன்று, கடுகு - 100 கிராம், உளுந்து - 100 கிராம், சீரகம் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, மஞ்சள் துாள் - இரண்டு தேக்கரண்டி, உப்பு ஒரு தேக்கரண்டி, விளக்கெண்ணெய் - ஒரு தேக்கரண்டி.

செய்முறை: பூண்டை தட்டித் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து நைஸாக நீளவாக்கில் அரியவும்.

இதில் தட்டிய பூண்டு, கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பொடியாக அரிந்த கறிவேப்பிலை, மஞ்சள்துாள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

பின் விளக்கெண்ணெய் விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து, பெரிய கொய்யாக்காய் அளவு உருண்டைகளாக்கி வெயிலில் காய வைக்கவும்.

தினமும் உருண்டைகளை அழுத்திப் பிடித்து, வெயிலில் காயவைக்கவும்.

இது சுண்டி காய்ந்து எலுமிச்சை அளவில் சுருங்கி, அரக்கு நிறமாவது தான் பதம்.

குழம்பு, கூட்டு போன்றவை தாளிக்கும்போது இதில் சிறிது கிள்ளிப் போட்டுத் தாளித்தால், மணம் ஊரையே கூட்டி விடும்.