குடல் நலன் காக்கும் மசாலாக்கள்

உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள், 13 % நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, 20 % சர்க்கரை அளவை குறைப்பதாக கூறுகின்றனர், அமெரிக்கா பல்கலை ஆராய்ச்சியாளர்கள்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் அசைவ உணவுகளின் பாதிப்பை குறைப்பதற்காகவே, அதில் பட்டை, லவங்கம் சேர்க்கப்படுவதாக கூறுகின்றனர், மைசூர் உணவு தொழில்நுட்ப மைய ஆய்வாளர்கள்.

மசாலாக்களில் இஞ்சி, செரிமானத்துக்கு உதவும் முக்கியமான திரவங்களை ஊக்குவிக்கும். இது வயிற்றில் உணவு கரையும் போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவு குழாயில் தேங்க விடாமல் வெளியேற்றுகிறது.

லவங்கத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் செரிமானத்துக்கு உதவுகிறது. அதோடு செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவை கட்டுப்படுத்தி, வாந்தி மற்றும் குமட்டல் வராமல் தடுக்கிறது.

சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், இரைப்பை ஒவ்வாமையை குணமாக்கும். அதோடு, நுண் தொற்றுகளிடமிருந்து இரைப்பையின் உட்பகுதியை பாதுகாக்கிறது.

ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த மிளகு, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், குடல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

சோம்பு குளிர்ந்த மற்றும் இனிப்பு பண்புகள் கொண்டது. இவை நொதிகளை செயல்படுத்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. எனவே, உணவுக்கு பின் சோம்பை கொறிப்பது வழக்கமாக உள்ளது.

கறி மசாலாவோடும், தாம்பூலத்தோடும் ஜாதிக்காய் சேர்ப்பது வழக்கம். காரணம், இது வாயு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலியை சரி செய்கிறது. அஜீரணத்தையும், உடலில் சேரும் நச்சுக்களையும் அகற்றும்.

கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவை, பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டவை.

மசாலா பொருட்கள் உடலுக்கு நல்லது தான். இருப்பினும், அதையும் அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும்.