மொட்டை மாடியை அழகிய பூங்காவாக மாற்ற எளிய வழிகள்!
குறைந்த பரப்பளவு மனையை வாங்குவோர் அதில், தோட்டம் அமைக்க வேண்டும் என்றால் மொட்டை மாடி அல்லது பால்கனி பகுதிகளையே நம்பி உள்ளனர். செடி கொடிகளை வாங்கி மாடி தோட்டம் அமைப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
மொட்டை மாடியில் தொட்டிகள் அமைத்தும், பைகள் வைத்தும் செடிகள் வளர்ப்பதை திட்டமிட்டு மேம்படுத்தினால், உங்கள் வீட்டிலேயே ஒரு பூங்கா உருவாகிவிடும்.
மாடியில் என்னென்ன வகை செடிகளை வளர்ப்பது என்பதை தெளிவாக திட்டமிடுங்கள். தொட்டிகள், பைகளை பயன்படுத்தி வளர்ப்பதற்கான செடிகள் தேர்வில், சில அடிப்படை வழிமுறைகளை பின்பற்றவும்.
குறிப்பாக, செடிகள், கொடிகளை வகை வாரியாக வரிசைபடுத்தி தேர்வு செய்வதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். சற்று உயரமாக வளரும் செடிகள், புதர் போன்று பரந்து வளரும் செடிகள் ஆகியவற்றை தேர்வு செய்யலாம்.
இரும்பு கம்பிகளை பயன்படுத்தி கொடிகள் படரும் இடவசதியை ஏற்படுத்தலாம். இதற்கான பந்தலில், சிறிய வகை மூலிகை தாவரங்கள், பூச்செடிகளை தொங்கும் தொட்டிகள் அமைத்து வளர்க்கலாம்.
கொடி வகையில் காய் தரும் வகை, பூக்கள் தரும் வகை என பிரித்து தேவையான தாவரங்களை தேர்வு செய்யுங்கள்.
மரம், செடி, கொடி என்று, காய்கள், பூக்கள் வளர்ந்து செழிக்கும் நிலையில் உங்கள் வீட்டு மொட்டைமாடி ஒரு பூங்காவாக மாறிவிடும்.
அதிகம் வேர் விடாத, அதே நேரத்தில் குறைந்த அளவு தண்ணீரில் வளரும் செடிகளை தேர்வு செய்து வளர்க்கலாம்.