வரும் 26 முதல் ரயில் கட்டணம் உயர்வு!
'விரைவு ரயில்களில், 215 கி.மீ., துாரத்துக்கு மேல், 'ஸ்லீப்பர், ஏசி' வகுப்பில், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு, வரும் 26 முதல் அமலுக்கு வரும்' என, ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வேயில் நாடு முழுதும் உள்ள 19 மண்டலங்களில், 12,617 பயணியர் ரயில்கள், 11,700க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், 2.40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்வேயின் சராசரி வருவாயில், சரக்கு பிரிவில் மட்டும் 70 சதவீதம் வரை கிடைக்கிறது.
புதிய ரயில் பாதை, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்கள் மேம்பாடு, பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்த'கவச்' தொழில்நுட்பம் அறிமுகம் போன்ற திட்டங்களை ரயில்வே செயல்படுத்தி வருகிறது.
215 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்வோருக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, சாதாரண வகுப்பில் 215 கி.மீ., வரை பயணம் செய்வோருக்கு கட்டண உயர்வு இல்லை.
அதற்கு மேல் பயணம் செய்தால், கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயரும்.
அதேபோல, மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு, கி.மீ.,க்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
இந்த கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.