எளிமையாகும் வைரஸ் சோதனை

வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் ஒன்று உண்டு.

அதாவது, உடலுக்குள் பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு தான் வைரஸ் இருப்பதே தெரிய வரும். அதற்குள் நம்மிடமுள்ள வைரஸ் பிறருக்கு பரவி விடும்.

எனவே, அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே ஒருவர் உடலில் வைரஸ் உள்ளதா, இல்லையா என அறிந்து கொள்வதும், பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதும் அவசியம்.

ஆனால், இப்படி கண்டறிவது எளிதில்லை. இதற்கான சில கருவிகள் இருந்தாலும் அவை விலை அதிகமானவை; மெதுவாக வேலை செய்பவை.

எனவே, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பல்கலை இதற்கு ஓர் எளிய தீர்வு கண்டுள்ளது. ச்யூயிங்கம்மில் வைக்கும் படியான உயிரியல் உணரியை உருவாக்கியுள்ளனர்.

இதன் முக்கியமான சேர்மம், 'க்ளைகோபுரோட்டீன்' எனப்படும் ஒரு புரதம். புதினா குடும்பத்தைச் சேர்ந்த தைம் தாவரத்திலுள்ள தைமால் எனும் சேர்மத்தின் மீது இப்புரதம் பூசப்படும்.

இந்த கலவையை ச்யூயிங்கம்மில் வைத்து, ஒருவருக்கு உண்ண கொடுக்கப்படும். ஆரோக்கியமான மனிதர்களால் தைம் சுவையை உணர இயலாது, காரணம் புரதப் பூச்சு.

ஆனால், பாதிப்புள்ளவர் உடலிலுள்ள வைரஸ் புரத மூலக்கூறுகளை உடைப்பதால், உள்ளேயுள்ள தைமால் மூலக்கூறுகள் நாக்கில் பட்டு, தைம் சுவையை உணர வைக்கும்.

இந்த எளிய சோதனை மூலம் உடலில் வைரஸ் உள்ளதா, இல்லையா என கண்டறியலாம்; இது சோதனை முயற்சியில் உள்ளநிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.