புகை பிடிப்பதால் பற்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?

புகை பிடிப்பது உடலுக்கு எந்த அளவிற்கு தீங்கு விளை விக்குமோ அதே அளவிற்கு வாய், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

முதல் கட்டமாக பற்கள் பழுப்பு நிறத்தில் மாறும். நீண்ட காலம் புகை பிடிப்பவர்களின் பற்கள் கறுப்பாக மாறிவிடும்.

இவ்வாறு படியும் கறைகள் பின்னர் காரைகளாக மாறும். இந்த காரைகளே கிருமிகள் தங்கும் இடமாகும்.

இது பற்களை சுற்றியுள்ள ஈறுகளையும் எலும்பையும் அரிக்க ஆரம்பிக்கும். இதனால் சொத்தையே இல்லாமல் கூட பற்கள் ஆடி விழும் நிலை உருவாகும்.

புகை பிடிப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். இதனால் பல் சொத்தை மற்றும் ஈறு நோய்கள் எளிதாக வரும் வாய்ப்புள்ளது.

ஈறுகளுக்கு வரும் ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் ரத்தஓட்டம் குறைவாக இருக்கும். ஈறுகள் பலவீனமாக மாறும். பல் தேய்க்கும் போது கூட ரத்தம் வரும்.

உமிழ்நீர் சுரப்பது குறைந்து, வாய் உலர்வாக இருப்பது போன்று இருக்கும். உண்ணும் உணவின் சுவை சரியாக தெரியாது.

வாய் புற்று நோய் வருவதற்கு முதல் காரணமே புகைப்பிடிப்பதும், புகையிலை உபயோகிப்பதும்தான்.