திருவாதிரை விரதம்... தில்லை நடராஜருக்கு களி மிகவும் பிடிக்க காரணம் என்ன?
தில்லையில் சேந்தனார் எனும் சிவபக்தர் விறகு வெட்டி விற்று, தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்ய தவறமாட்டார். நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார்.
சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். ஒருநாள் திருவாதிரை திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.
தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் சேந்தனார் தவித்தார். அதனால் வீட்டில் சமைப்பதற்கு எந்த பொருளும் இல்லை.
காட்டிற்கு சென்று விறகு வெட்டி அதை விற்றால் தான், அன்றைக்கு உணவு. எனவே, சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? எப்படி உபசரிப்பது? என சேந்தனாரும், அவரது மனைவியும் கவலைப்பட்டனர்.
அப்பொழுது, வீட்டு வாசல் முன், திருச்சிற்றம்பலம்! சம்போ மகாதேவா... என்ற குரல் கேட்டது. வெளியே சிவனடியாரை பார்த்ததும் அவரை வீட்டிற்குள் அழைத்து, இருவரும் மகிழ்வுடன் பணிவிடை செய்தனர்.
சிவனடியாரின் பசியை போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள்.
சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடைபெற்று சென்றார். மறுநாள் காலை சேந்தனாரும், அவரது மனைவியும் ஸ்ரீநடராஜ பெருமானை தரிசிக்க சிவாலயம் சென்றார்கள்.
அங்கு கோவிலை திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறி கிடப்பதை கண்டு வியந்தார்கள். சேந்தனாரும், அவரது மனைவியும் கூட இதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்கு களி கொடுத்து உபசரித்ததையும் சேந்தனார் அந்தணர்களிடம் கூற, இது நடராஜ பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, போற்றி மகிழ்ந்தார்கள்.
அன்று முதல் மார்கழி திருவாதிரைக்கு களி செய்து நடராஜருக்கு நிவேதனம் செய்வதாக புராணம் கூறுகிறது. விரதம் இருந்து திருவாதிரை களியை உண்பவர்கள் சொர்க்கம் செல்வர் எனவும் நம்பிக்கை நிலவுகிறது.