உமிழ் நீர் சுரப்பது குறையும்போது வரும் பிரச்னைகள் குறித்து அறிவோமா!

சிலருக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகும். நாக்கு ஒட்டிக்கொள்வது போல் இருக்கும். வாயில் எரிச்சலும் இருக்கும்.

இந்த நிலைக்கு சீரோஸ்டோமியா (Xerostomia) என்று பெயர். உமிழ் நீர் சுரப்பது குறையும்போது இதன் அறிகுறிகள் தென்படும்.

இவை வருவதற்கு உணவுபழக்கம், இரும்புசத்து குறைவு, சில மாத்திரைகள், புகை பிடித்தல், மது அருந்தும் பழக்கம், சர்க்கரை நோய் போன்ற காரணங்கள் உண்டு.

இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் உணவு உண்பதற்கும் விழுங்குவதற்கும் கடினமாகிவிடும்.

நமது உமிழ்நீர் இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அது குறையும்போது சொத்தைப்பற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

பல் செட் அணிபவர்களும் வாய் உலர்ந்து போகும் பட்சத்தில் பல் செட் அணிய முடியாமல் அவதிப்படுவர்.

இது நீண்ட காலம் தொடர்ந்தால் அஜீரண கோளாறுகள், வயிறு உபாதைகள் வரக்கூடும். தொண்டைப்புண், பூஞ்சை தாக்குதலின் போதும் வாயில் வெள்ளை திட்டுகள் மற்றும் வாய் துர்நாற்றமும் வரும்.

சரியான முறையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் வாயும் உடலும் ஆரோக்கியம் பெற்று நலமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.