இதயத்துக்கு எமனாகும் இரவு வெளிச்சம்

இரவுப் பணி காரணமாக, செயற்கை மின்விளக்கு வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால், உடலிலுள்ள இயற்கைக் கடிகாரம் குழப்பமடைந்து பல நோய்களுக்கு வழிவகுக்கிறது.

இது குறித்து உலகில் இதுவரை செய்யப்பட்ட ஆய்விலேயே மிகப்பெரிய ஆய்வை ஆஸ்திரேலியாவின் ப்லிண்டர்ஸ் பல்கலை செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தாய்வு 9.5 ஆண்டுகள் 40 வயதுடைய 88, 905 மக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

இரவு நேரம் விழித்திருந்து மின் விளக்கு வெளிச்சங்களில் வேலை செய்பவர்கள், பகலில் வேலை செய்பவர்கள் என்று இரு தரப்பினர் பிரிக்கப்பட்டு, உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

ஆய்வு முடிவில் இரவு 12.30 முதல் காலை 6 மணி வரை செயற்கை வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பிறரை விட 56 % அதிகம் இருப்பது தெரிய வந்தது.

வெளிச்சத்தின் அளவு 'லக்ஸ்' எனும் அலகில் அளக்கப்படுகிறது. இரவு வானத்தின் வெளிச்ச அளவு 0.01 லக்ஸ், இதுவே சிறிய இரவு விளக்கு பொருத்தப்பட்ட அறை என்றால் அதன் வெளிச்ச அளவு 5 லக்ஸ்.

105.3 லக்ஸ் வெளிச்ச அளவில் வேலை செய்பவர்களுக்கு மோசமான இதய பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எனவே, இரவில் துாங்கி, பகலில் சூரிய வெளிச்சத்தில் அல்லது மின்விளக்கு வெளிச்சத்தில் வேலை செய்வதே சிறந்தது என்பது அறிவியலாளர்கள் கருத்து.