ஒரு நாளில் எவ்வளவு ஊறுகாய் சாப்பிடலாம்?

தென்னிந்தியர்களின் மதிய சாப்பாட்டில் ஊறுகாய் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய் என்ற முழு சாப்பாட்டுக்கு உணவகங்களில் டிமாண்ட் அதிகம்.

எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட பல காய்களில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய், உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமின்றி உடலுக்குத் தேவையான பல தாதுக்களையும் அளிக்கிறது.

ஆனால், அளவுக்கதிகமாக ஊறுகாய் சேர்த்தால் உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதய நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

இதில் சோடியம் அளவு அதிகம். ஒரு எலுமிச்சை ஊறுகாயில் மட்டும் 785 மி.கி., சோடியம் உள்ளது. உடலுக்குத் தேவையான தாதுக்களில் ஒன்றான இது, அளவுக்கதிகமாக சேர்ந்தாலும் பிரச்னையே.

குறிப்பாக 50 வயதைக் கடந்தவர்களுக்கு அளவுக்கதிகமான சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், நாள்பட்ட நீரிழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஊறுகாய்க்கு உடல் வலி, வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. எனவே தினமும் மதிய சாப்பாட்டில் ஊறுகாய் சேர்த்துக்கொள்வது நல்லது.

அதே சமயம் அதீத எண்ணெய், கார மசாலாவில் ஊறுகாய் நீண்ட நேரம் ஊறுவதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க வாய்ப்புள்ளது; நாளடைவில் இதயக்குழாய் அடைப்பை ஏற்படுத்தும்.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் மாங்காய், நார்த்தங்காய் ஊறுகாய்களைத் தவிர்ப்பது நல்லது. இவற்றை தயிர் சாதத்துடன் சேர்த்து உட்கொள்ளும்போது உடல் உஷ்ணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புதிதாகத் தயாரித்த ஊறுகாயில் உப்பின் அளவு குறைவாக இருக்கும். அதே வேளையில் ஊறுகாய் ஊற ஊற அதில் உப்பின் அளவு அதிகரிக்கும்.

அளவுக்கதிகமான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால், தயாரித்து சில நாட்கள் ஆன ஊறுகாயைச் சாப்பிடுவதை முதியவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.