கூடு வைத்தால் தேடி வரும் பறவை... இன்று உலக சிட்டுக்குருவி தினம் !

முன்பு வீடுகளுக்குள் கூட்டமாக வந்து செல்லும் சிட்டுக்குருவி, இன்று அழிந்து வரும் பறவையினங்களின் பட்டியலில் உள்ளது.

சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பறவை இனங்களில் மிகச் சிறியதாக, அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும் பறவை சிட்டுக்குருவி. இவை மனிதர்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் காணப்படும்.

ஆனால் தற்போது பெருகிவிட்ட நகரமயமாக்கலாலும், வயல்வெளிகள் வீட்டு மனைகளாக மாறிவிட்டதாலும், சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடம், இரைதேடுமிடங்கள் சுருங்கி விட்டன.

முன்பு ஓட்டு வீடுகளே இருந்தன; ஓட்டுக்கும், சுவருக்கும் இடையே காற்றோட்டத்திற்காக உள்ள இடைவெளிகளில், இவை கூடு கட்டி வாழ்ந்தன. தற்போதைய கான்கீரிட் கட்டடங்களில் இந்த வசதி இல்லை.

நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள் சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும். அதிலுள்ள துளைகள் வழியே சிதறும் தானியங்களை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன.

ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் 'பேக்' செய்யப்படுவதால், சிட்டுக்குருவிகளுக்கான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது.

அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாகவும் இவை அழியும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, அழிந்துவரும் பறவை இனங்களை காக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.