ஐப்பசி அடைமழைக் காலமும்.. ஆன்மீக விழாக்களும்..!

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம். அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.

இம்மாதத்தில் பாரதத்தின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென் இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை வடஇந்தியாவில் லஷ்மி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான ஸ்கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.

இம்மாத பௌர்ணமியில் எல்லா சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன.