வாரிசு குழப்பம் உள்ள பட்டாவை நம்பி வீடு, மனை வாங்கலாமா?

பல இடங்களில் வாரிசுகளில் ஒருவர் தன் பெயரில் ஏதாவது ஒரு பத்திரத்தை தயாரித்து, அதை காட்டி சொத்து விற்பனையை முடிக்க முயற்சிப்பார். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உள்ள நிலையில், பட்டா தெளிவாக இருக்காது.

இத்தகைய சூழலில் பத்திரத்தை மட்டும் நம்பி நீங்கள் அந்த சொத்தை வாங்கினால், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து பட்டா தொடர்பான விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.

குறிப்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் நேரடி வாரிசுகளாக உள்ள சொத்துகளில் பத்திர அடிப்படையிலான வில்லங்க சரி பார்ப்பு மட்டும் போதாது.

நீங்கள் வாங்க நினைக்கும் சொத்தில், கடந்த, 30 ஆண்டுகளில் பத்திர ரீதியாக நடந்த பரிமாற்றங்கள் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும்.

வில்லங்க சான்றிதழ் மற்றும், முந்தைய ஆவணங்களின் பிரதி அடிப்படையில் இந்த விபரங்களை பட்டியலிட வேண்டும்.

பதிவு தேதி, பத்திர எண், விற்றவர், வாங்கியவர் பெயர், பரப்பளவு, மதிப்பு ஆகிய விபரங்களை பட்டியலிடும் போது அதில் ஏதாவது வேறுபாடு உள்ளதா என்பது தெரியவரும்.

இதில் அனைத்து விபரங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகும் நிலையில், அந்த சொத்தில் வில்லங்கம் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுகின்றனர்.

பத்திர ரீதியாக வாரிசுகள் பெயரில் பரிமாற்றம் நடந்ததாக ஒரு ஆவணத்தை உங்களிடம் விற்பவர் காட்டினாலும், அந்த விபரம் பட்டாவில் தெளிவாக உள்ளதா என்று பாருங்கள்.

பட்டாவில் குறைபாடு இருக்கும் சொத்துக்களை அவசரப்பட்டு வாங்குவதில் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் வருவாய் துறை அலுவலர்கள்.