நீரிழிவால் பாதிக்கப்படும் குழந்தைகள்... பள்ளி கேன்டீன்களில் இனி இனிப்புக்கு நோ?

உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க இருதய சங்கம் பரிந்துரையின் படி, 2 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு அதிகபட்சம், 25 கிராம் சர்க்கரை வழங்குவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், காலையில் டீ கொடுப்பது முதல் பிஸ்கட், சாக்லேட், ஜூஸ், பேக்டு நுாடுல்ஸ், சாஸ், பிரெட், என அனைத்து உணவுகளிலும், சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது.

தினசரி வாழ்வில் இதுபோன்று சர்க்கரையை அதிகமாக நுகரும் குழந்தைகள், தற்போது டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர்.

அதை தவிர்த்து, வளர் சிதை மாற்றங்கள், இதயம் சார்ந்த சிக்கல்கள், உடல் பருமன், பல் சார்ந்த பிரச்னைகள் என, எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்க இதுவே காரணமாக அமையவுள்ளது.

பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன், இந்தளவிற்கு சாக்லேட், ஐஸ்கிரீம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இல்லை. தற்போதோ இவை பல பிராண்டுகளில், விதவிதமாக குழந்தைகளுக்கு எளிதாக கிடைக்கிறது.

எனவே, எதிர்காலத்தில் நோயாளிகள் நிறைந்த சமூகமாக மாறிவிடும் என்பதால், பள்ளிகளில் 'ஸ்நாக்ஸ் பிரேக்' வேளையில் சர்க்கரை, தேன், நாட்டு சர்க்கரை, கான் சிரப் என இனிப்புகளை அனுமதிக்கக்கூடாது.

தவிர, பள்ளி கேன்டீன்களில் இனிப்பு, துரித உணவுகளின் விற்பனை, உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

பள்ளிகளை சுற்றி புகையிலை பொருட்கள் மட்டுமின்றி, இதுபோன்ற பொருட்களின் விற்பனையையும் தடை செய்யுமாறு தேசிய குழந்தைகள் நலக்குழுமம் வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் விரும்பவில்லை என்றாலும் பழங்கள், காய்கறி, விதைகள், பருப்பு வகைகளை உட்கொள்ள பழக்கப்படுத்த வேண்டியது அவசியம்.