வெள்ளத்தில் தத்தளிக்கும் யு.ஏ.இ., செயற்கை மழை திட்டம் தான் காரணமா?
யு.ஏ.இ.,யில் வழக்கமாக ஓர் ஆண்டில், 9.47 செ.மீ., அளவுக்கு மழை பெய்யும். ஆனால், நேற்று முன்தினம் இரவு வரையிலான, 24 மணி நேரத்தில், 14.2 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது.
குறிப்பாக துபாய் விமான நிலையம் ஒட்டிய பகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்தது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் இதனால் மூடப்பட்டது.
கடந்த, 1949ம் ஆண்டில் இருந்து, யு.இ.ஏ.,யில் மழை தொடர்பான தகவல்கள் உள்ளன. இந்த புள்ளிவிபரங்களில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த வெள்ளத்திற்கு செயற்கை மழை முயற்சி தான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நிலத்தடி நீரை தக்க வைக்க, அடிக்கடி இந்த நாடுகள், 'கிளைவுட் சீடிங்' எனப்படும் மேகவிதைப்பு முறையை பயன்படுத்துகின்றன.
இந்த திட்டத்தின்படி, குறிப்பிட்ட ரசாயனப் பொருட்களை மேகத்தில் தூவுவதன் வாயிலாக மழையைப் பெறுகின்றன.
எப்போதாவதுதான் மழை பெய்யும் என்பதால், யு.ஏ.இ.,யில் மழைநீர் வடிகால் வசதிகள் கிடையாது. இதனால், இந்த பெருமழையை சமாளிக்க முடியாமல், சாலைகளில் மழைவெள்ளம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் யு.ஏ.இ., பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக தண்ணீரை பெற்று வருகின்றன.
மழையை மிக அபூர்வமாக பார்க்கும் பாலைவன நாடான யு.ஏ.இ.,ல் வரலாறு காணாத அளவு மழை பெய்ததால், பல பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன