வேகமாக பரவும் எச்எம்பிவி வைரஸ்... தவிர்ப்பது எப்படி?

சீனாவில் உருவான கோவிட் வைரஸ் காரணமாக உலகமே முடங்கிய நிலையில், தற்போது அங்கு எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹியூமன் மெடா நிமோ வைரஸ் - எச்எம்பிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் குழந்தைகள், முதியவர்களை அதிகம் தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக தெரிகிறது. இது வழக்கமான குளிர்கால நோய் என சீனா சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

எச்எம்பிவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் , மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளிட்டவை முதலில் ஏற்படும்.

இந்த வைரஸ் கடந்த 2001ல் கண்டுபிடிக்கப்பட்டது. சுவாசப்பாதை மற்றும் தொண்டையில் தான் தொற்றை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்றவை ஏற்படக்கூடும்.

3 முதல் 6 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். அப்போது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண சிகிச்சையே இதற்கு அளிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க கைகளை சோப் மற்றும் தண்ணீர் மூலம் 20 நொடிகள் கழுவ வேண்டும். கைகளை கழுவாமல், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடக்கூடாது.

பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கூடாது. வெளியே செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.