இன்று சர்வதேச துருவக்கரடி தினம்

ஒவ்வொரு ஆண்டும், பிப்., 27ல், 'சர்வதேச துருவக்கரடி தினம்' அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாள், ஒரு கொண்டாட்டமாக இல்லாமல், ஆர்க்டிக் பனிப்பரப்பின் மீது உயிர் வாழும் துருவக் கரடிகளின் எதிர்காலத்தைப் பற்றிய எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

துருவக்கரடி, உலகின் மிகப்பெரிய கரடி இனமாக உள்ளது. ஆண் கரடி, 800 கிலோ வரை எடை கொண்டிருக்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் ஓடும் திறன் உடையது.

இதன் பாதங்கள், பெரிய தட்டுகளைப் போல விரிந்து, பனியில் சறுக்காமல் நடப்பதற்கும், ஓடுவதற்கும் உதவும்.

இதன் தோல் கருப்பு. அதில் உள்ள ரோமங்கள் நிறமிகளற்றவை. ஆனால், இந்த ரோமங்கள், ஒளியைப் பிரதிபலித்து, வெள்ளையாக காட்சியளிக்கும்.

தோலின் கீழ் படர்ந்துள்ள, 4 அங்குலம் தடிமனான கொழுப்பு, இதைக் கடுங்குளிரிலிருந்து காக்கிறது. குளிர்காலத்தில் தாய்க் கரடிகளும், குட்டிகளும், பனிக்குகையில் மாதக்கணக்கில் உறங்கும்.

புவி வெப்பமயமாதலால், கடற்பனி வேகமாக உருகி வருகிறது. இதனால், உணவு தேட இயலாமல், துருவக்கரடிகள் நீண்ட துாரம் கடலில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

துருவக்கரடி, 1,30,000 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. தற்போது, அதன் வீடே உருகிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தினம், கொண்டாட்டமாக இல்லாமல், நாம் ஒவ்வொருவரும் கரியமில வாயு வெளியீட்டைக் குறைத்து, பனி உருகுதலைத் தடுக்க உறுதி ஏற்கும் நாளாக மாற வேண்டும்.