இன்று உலக புற்றுநோய் தினம்!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் 2வது இடத்தில் புற்றுநோய் உள்ளது. ஆண்டுக்கு 1 கோடி-பேர் உயிரிழக்கின்றனர்.

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதை குணப்படுத்தலை அதிகரித்திடவும், 2008 முதல் பிப்., 4ம் தேதி 'உலக புற்றுநோய் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.

2025 - 2027 வரை மூன்றாண்டுக்கு, 'தனித்துவத்தால் ஒன்றுபடுவோம்' என்பது இத்தினத்தின் மையக்கருத்து.

உடலின் செல்கள், ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறினாலோ, வேறு காரணிகளால் ஏற்படும் மாற்றங்களாலோ மிகைப்பெருக்கத்திற்கு உள்ளாகி, புற்றுநோய் செல்களாக மாறுகின்றன.

ரத்த புற்றுநோயைத் தவிர்த்து ஏனைய புற்றுநோய்களில் பொதுவாக கட்டிகள் தோன்றும்.

புற்றுநோய் முற்றிய நிலையில், புற்றுநோய் செல்கள் ரத்த சுற்றோட்டத்தின் வழியாகவோ அல்லது நிணநீர்த் தொகுதி (Lymphatic system) வழியாகவோ மற்ற உடற்பாகங்களுக்கு பரவக்கூடும்.

நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fats) அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகை பழக்கம், குடிப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.தினந்தோறும் உடற்பயிற்சி செய்திடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

புற்றுநோயினை ஆரம்பக்கட்டதிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம், முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.