உணவில் அறுசுவை அவசியம்!... எந்த சுவைக்கு என்னென்ன பலன்?
வேறு எந்த நாட்டு உணவு முறைகளிலும், 'அறுசுவை உணவு, அறுசுவை விருந்து' என்ற வார்த்தைகளே கிடையாது. இவை, நம் பாரம்பரியத்துக்கே உரியவை. அவற்றின் பயன்கள் குறித்து அறிவோமா...
புளிப்பு: உடலை துாய்மையாக்கும்; வளர்ச்சிக்கு உதவும். அதிக பசியோடு இருக்கும் போது, புளிப்பு குணமுடைய உணவுகள் சிறந்தது.
இனிப்பு: இது, உடலுக்கு சக்தியைத் தரும்; மூளைக்கு புத்துணர்ச்சியைத் தரும். குறிப்பிட்ட அளவுக்கு இனிப்புச் சுவை இருந்தால், உடல் வனப்பாய் இருக்கும். அதிகரித்தால், ஒருவித கிறுகிறுப்பைத் தரும்.
துவர்ப்பு: இந்த சுவை புண்கள் ஆற உதவும். மாதுளை, நெல்லிக்காய், வாழைப்பூ, தேங்காய்ப் பால், கறிவேப்பிலை, அத்திக்காய், கடுக்காய் போன்றவை வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியவை
கசப்பு:கசப்பு நம்முடைய ஜீரண நீர்களைத் துாண்டும். நரம்பை வலுவேற்றும். மூளைத் திறனை அதிகரிக்கும்.
வெந்தயம், கடுகு, தனியா, பாகற்காய், அவரைக்காய், கத்தரிக்காய், சுண்டைக்காய், மிதி பாகல் போன்றவை, கசப்புச் சுவை உடையவை.
உவர்ப்பு: இவை எலும்பை வளர்க்கும். வெறும் உப்பு மட்டும் உவர்ப்புச் சுவைக்குள் வராது. தாது உப்புகள் எல்லாமே உவர்ப்புச் சுவைக்குள் தான் வரும்.
சுரைக்காய், புடலை, பீர்க்கன்காய், பூசணி மாதிரியான நீர்க்காய்களில் தாது உப்புகள் இருக்கின்றன. ரத்த அணுக்கள் உருவாக, எலும்பு மஜ்ஜை தேவை. அந்த மஜ்ஜை சீராய் இயங்க உவர்ப்புச் சுவை முக்கியம்.
காரம்: ஜீரண உறுப்புகளை சுத்தம் செய்யும். அது ஒரு, 'நேச்சுரல் கிளீனர்!' காரச் சுவையில் சத்து ஏதும் கிடையாது. ஆனால், அது, குடல் செரிமான நீர்களை நன்கு துாண்டி விடும்.