வலி தரும் முடக்குவாதத்திற்கு சில தீர்வுகள்!

மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம், உட்கார்ந்து எழுந்திருப்பதில் சிரமம், காய்ச்சல், சோர்வு ஆகியவை ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்கு வாதத்தின் ஆரம்ப கட்ட அறிகுறிகள்.

சிலருக்கு மெதுமெதுவாக இந்த அறிகுறிகள் அதிகமாகி, விரல்கள் உட்பட மற்ற மூட்டுகளையும் முடக்கி விடும். பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும்.

ஆர்ஏ பேக்டர், ஆன்டி சிசிபி, சிஆர்பி, இஎஸ்ஆர் ஆகிய ரத்த பரிசோதனைகள் இதைக் கண்டறிய உதவும்.

மரபியல் காரணங்கள், ஆட்டோ இம்யூன் கோளாறு கள், சில வெளிக் காரணிகளாலும் இந்நோய் வரலாம். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்று கட்டுக்குள் வைப்பது நல்லது.

சித்த மருத்துவத்தில், நீண்ட கால தீர்வளிக்கும் பல மருந்துகள் உள்ளன. வாதமடக்கி என்கிற தழுதாழை மூலிகை தரிசு நிலங்களில் இயற்கையாக வளரும் மரம்.

இதன் இலைகளை நிழலில் காய வைத்து சூரணமாக்கி, அரை டீ ஸ்பூன் அளவு இரு வேளை தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வர மூட்டு வலி, வாதநீர் நீங்கி உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்.

இலைகளை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, வலி, வீக்கம் உள்ள மூட்டுகளில் ஒத்தடம் தரலாம். வலியும், வீக்கமும் குறையும்.

இதன் வேர், இலைகளை நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, பாதித்த மூட்டுகளில் தடவினால் முடக்குவாதம் கட்டுப்படும்.

நீண்ட கால தீர்வளிக்கும் முடக்கத்தான், பிரண்டை, வேலிப்பருத்தி, ஆவாரை, முட்சங்கன் போன்ற மூலிகைகள் உதவும்.

உணவுக் கட்டுப்பாடு அவசியம். சுண்டல், கிழங்கு வகைகள், எண்ணெய் பலகாரங்கள், அதிக குளிர்ச்சி, புளிப்பு, மாமிச உணவு களைத் தவிர்ப்பது நல்லது.

உள் மருந்துகளுடன் சேர்த்து, பற்று, ஒத்தடம், தைல காப்பு, வர்ம சிகிச்சைகளும் விரைவாக தீர்வு தரும்.