காய்ச்சல் காரணமாக உண்டாகும் சுவாசப் பாதை தொற்று... எப்படி சமாளிக்கலாம்?

தமிழகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு முன் மழை பெய்த நிலையில், இந்த தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக, சுவாசப்பாதை தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதன்படி, மாநிலம் முழுதும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

காய்ச்சல் காரணமாக சுவாசப் பாதை தொற்றுக்குள்ளான பின், மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை தொடர் இருமல் இருப்பது இயல்பானது. 100 பேரில், 25 பேருக்கு, இத்தகைய பாதிப்பு உள்ளது.

இதற்கு, தொற்றுக்குப் பிந்தைய இருமல் என பெயர். சுவாசப்பாதையில் கிருமிகளால் ஏற்படும் அழற்சியே இதற்கு காரணம்.

இதைத்தவிர, மேற்புற சுவாசப்பாதையில் சைனஸ் பகுதிகளில் அழற்சி, நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவற்றால், தொடர் இருமல் ஏற்படலாம்.

இந்த பாதிப்புகளுக்கு அவ்வப்போது வெந்நீர் பருகி வரலாம். வெதுவெதுப்பான தேநீர், சூப் போன்றவை பருகுவதும், எலுமிச்சைச் சாறில் தேன் கலந்து பருகுவதும் பலனளிக்கும்.

துாசு, புகை உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம்.

அதன்பின், இருமல் கட்டுப்படாவிட்டாலும், இருமும் போது ரத்தம் கசிந்தாலும், உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

எக்ஸ்-ரே, சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்து, நிமோனியா அல்லது வேறு பாதிப்புகள் உள்ளதா என கண்டறிவது அவசியம்.

சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள், இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றை, டாக்டரின் பரிந்துரையின்படி தான் உட்கொள்ள வேண்டும்.

எட்டு வாரங்களுக்கு அதிகமாக இருமல் இருந்தால் மட்டுமே, உரிய மருத்துவ சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டும்.

சாதாரண இருமல் பாதிப்புகளுக்கு அச்சப்படத் தேவையில்லை என அரசு பொதுநல டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.