டெங்கு, ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு... உஷாராக இருங்க !
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன், சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதில், 'ப்ளூ' வைரஸ்களால் பரவும், 'இன்ப்ளுயன்ஸா' காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது.
எனவே, இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்.
அதேபோல், கடுமையான காய்ச்சல், தலை வலி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட டெங்கு அறிகுறி இருந்தாலும், தாமதிக்காமல் சிகிச்சை பெறுவது அவசியம்.
தற்போது, டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளால் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தினமும் சிகிச்சை பெறுவதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்னனர்.
மிதமான பாதிப்புகள் இருப்பவர்கள், 'ஆன்ட்டி வைரல்' மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ எடுக்க தேவையில்லை.
அவர்கள் ஓய்வெடுப்பதுடன், ஆவி பிடிக்க வேண்டும். துளசி இலை, கற்பூரவல்லி இலை ஆகியவற்றை சாப்பிட்டாலே போதுமானது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளவர்கள், டாக்டர் பரிந்துரைப்படி, ஆன்ட்டி வைரல் மருந்துகளை எடுப்பது அவசியம்.
மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிவது நல்லது என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.