குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் ஆஸ்துமா!

வெளிக்காரணிகளை எதிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தி பெருக வாய்ப்பு இல்லாததால் ஒவ்வாமை ஏற்பட்டு, ஆஸ்துமா பாதிப்பு வருகிறது. ஆஸ்துமா நோயாளிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றனர்.

குழந்தைகள் மத்தியிலும் இப்பிரச்னை அதிகரித்து வருகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் மேம்பட்ட 'இன்ஹேலர் தெரபி, இம்மியூனோ தெரபி' என்று பலவித நவீன முறைகள் வந்து விட்டன.

ஆஸ்துமாவிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை செய்தால், நீண்ட காலத்திற்கு மருந்துகள் தேவைப்படாத அளவிற்கு மூன்றில் ஒருவரை குணப்படுத்தவும் முடியும்.

ஆஸ்துமா தவிர, நம் நாட்டில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் டி.பி., வரும் வாய்ப்பு உள்ளது. இது வேகமாக பரவக்கூடிய நோய் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

காச நோய் பாதிப்பு இருப்பவர்கள் நம் பக்கத்தில் வந்து இருமினால், நமக்கும் கிருமி தொற்று ஏற்படும். ஒரு பாக்டீரியா சென்றாலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

அந்த தொற்றை வியாதியாக மாற்றாமல் இருக்க, நம் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், நோய் வராமல் கட்டுப்படுத்தும்.

உள்ளுக்குள் சென்ற பாக்டீரியாவை உடல் வெளியில் அனுப்ப முடியாது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், பாக்டீரியாவுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கும்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, இந்த பாக்டீரியா வலிமை பெற்று நோயாக மாறிவிடும்.

அதனால், அனைவரும் வாழ்க்கை முழுதும் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, சத்தான உணவு என்று நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.