ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய... சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்!

ஐ.சி.எம்.ஆர்., 2023ல் வெளியிட்ட, ஆய்வறிக்கையின் படி, நாட்டில் மொத்த மக்கள் தொகையில், 9 % பேருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு ஏற்ப, பரிசோதனைகளும் மேம்பட்டு வருகின்றன.

தற்போது, சி.ஜி.எம்., நடைமுறையில், ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவு கண்காணிக்கப்படுகிறது. அதாவது, ஒரு சென்சார் சாதனம், நோயாளியின் கை / வயிற்று பகுதியில் பொருத்தப்படும்.

அதிலுள்ள, 2 முதல் 3 மி.மீட்டர் நீளத்திலான ஊசி, ரத்த நாளத்துடன் இணைக்கப்படும். அதன் வழியே, தினமும் ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை, நம் மொபைல் போனில் அறியலாம்.

இந்த சாதனத்தை நான்கு வாரங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பின் வேறு சாதனம் பொருத்த வேண்டும். இதற்கு கூடுதல் செலவாகும்.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவை எளிதாக அறிய, 'கை கடிகாரம்' வடிவிலான கருவியை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளனர்.

இந்த கை கடிகாரத்திற்கு கீழே, 'சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது.

அதிலுள்ள 1 மி.மீ., அளவிலான ஊசி, ரத்த நாளங்களுக்கு மேலுள்ள திரவங்கள் வழியே, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உடனடியாக கணக்கிட்டு, கடிகாரத்தின் திரையில் காட்டும்.

இந்த புதிய கருவியில், ஊசியை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.