முதியோருக்கும் உண்டு சின்ன சின்ன ஆசை...

பொதுவாக, 58-60 வயதில் பணி ஓய்வு என்பதை பலர் தவறாக புரிந்துகொள்கின்றனர். ஆனால், முதுமை வயதில் தான் பல ஏக்கங்கள், ஆசைகள் துளிர் விடும்.

குடும்பம், பிள்ளை, பொருளாதாரம் என ஓடிய கால்கள் தனக்கான தேவையை பூர்த்தி செய்துகொள்ளட்டும், தனது ஆசை, கனவுக்காகவும் ஓடட்டும் என்று ஒரு வயது ஓய்வுக்காக நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஓய்வுக்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது அவரவர் விருப்பமாக இருக்கவேண்டும். வீட்டில் நான்கு சுவற்றுக்குள் முடங்கிவிடவேண்டும் என்று அவசியம் இல்லை.

பல ஆராய்ச்சிகள் , 60 வயதுக்கு மேல் நண்பர்களுடன் பேசவேண்டும், உறவினர்களை பார்க்கவேண்டும், பிடித்த இடத்திற்கு செல்லவேண்டும் என பல ஆசைகள் துளிர்விடுவதை உறுதி செய்கிறது.

பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், சுற்றுலா போன்றவற்றில் நம் வீடுகளில் உள்ள முதியவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும்.

வீட்டில் சூழலுக்கு ஏற்ப, அவர்களுக்கு என ஓர் தனி இடம் கொடுத்துவிடவேண்டும்.

முதுமை வயதில் செக்ஸ் என்பதை தாண்டிய, பிரைவசி என்பது அவர்களுக்கும் தேவை என பிள்ளைகள் புரிந்துகொள்ளவேண்டும்.

நம் வயது முதிர்ந்த பெற்றோருக்கு பார்த்து பார்த்து, அனைத்தும் செய்தாலும் அவர்கள் கையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை, அவரவர் சக்திக்கு ஏற்ப கொடுத்து பழகுங்கள்.

முதுமை வயது நமக்கானது என்ற உணர்வு அனைவருக்கும் வரவேண்டியதும் அவசியம். உறவினர்களும் அதை புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தவேண்டும்.