தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்
'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் ஏற்படுகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு, பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
'எலிசா' ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் வாயிலாக, நோயை கண்டறியலாம்.
'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் தந்து, சிகிச்சையளிக்க வேண்டும்.
பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளம் வழியே, திரவ மருந்துகளை செலுத்தி, சிகிச்சையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில், அதிக அளவில், 'ஸ்க்ரப் டைபஸ்' பரவல் உள்ளது.
அதேபோல், கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இத்தகைய பாதிப்பு காணப்படுகிறது.