கண்களைச் சுற்றிலும் கருவளையம் உண்டாவது ஏன்?
'பெரயோபிட்டல் ஹைப்பர் பிக்மென்டேஷன்' எனும் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையத்திற்கு சிகிச்சை அளிப்பது, தோல் டாக்டர்களுக்கு சவாலாக இருக்கும் பிரச்னை.
ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடு, சமச்சீரின்மை போன்றவற்றால், ஆண்களை விட, இது பெண்களையே அதிகளவில் பாதிக்கிறது.
போதிய நேரம் துாங்காவிட்டால், கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவதாக பொதுவாக நினைக்கலாம், ஆனால், மரபியல் கோளாறு உட்பட பல்வேறு காரணிகளால் கண்களின் கீழ் இமைகள் பாதிக்கப்படும்.
இதுதவிர, துாக்கமின்மை, தரமற்ற மற்றும் அதிக ரசாயனப்பொருட்கள் உள்ள 'ஐ - லைனர், மஸ்காரா' போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாலும் கருவளையம் உண்டாகலாம்.
ஆஸ்துமா உட்பட பல்வேறு பிரச்னைகளால் உடலில் ஏற்படும் தாக்கம், அழற்சி காரணமாக கூட கண்களின் கீழ் பகுதியில் கருவளையம் வரலாம்.
அடிக்கடி கண்களைத் தேய்ப்பது, சரியான 'பவர்' லென்ஸ் அல்லது கண்ணாடி அணியாமல் இருப்பது, மொபைல் போன் திரைகளை அதிக நேரம் பார்ப்பதாலும் கருவளையம் உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட வயதிற்கு முன் தோல் சுருங்குவது, வைட்டமின், இரும்பு சத்து குறைபாடு, தைராய்டு, கேன்சர் மற்றும் மன அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகள் கருவளையத்துக்கு வழிவகுக்கும்.
காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை துவக்கத்திலேயே தந்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.