கோடையில் உடலை கூல் பண்ணும் உணவுகள்!

கோடை காலத்தில், காலை வேளையில், எளிதில் ஜீரணமாகும், உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்த்து, உடலுக்கு சக்தி தரும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தர்பூசணி மற்றும் முலாம் உள்ளிட்ட சீசன் பழங்களை சாப்பிட வேண்டும். இவை, சரும பிரச்னைகளை சரிசெய்யும். உடல் கழிவுகளை நீக்கும்.

இரவில் சாதம் வடித்து உண்பவர்கள், சாதத்தை அதிகமாக வடித்து, மிஞ்சும் சாதத்தில், தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் காலை, பழைய சோறு, நீராகாரமாக குடிக்கலாம்.

மோர் குடிப்பது அமிலத்தன்மையைத் தடுக்கிறது. எனவே சாதத்தில் மோரை தாளித்து கலந்து சாப்பிடலாம்.

நீர்ச்சத்து அதிகமுள்ள, பூசணி, வெள்ளரி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடலாம். இது, உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால், உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள நார்ச்சத்து, வயிறு கோளாறுகளை சரிசெய்யும்.

ஆப்பிள், திராட்சை, அன்னாசி, மாதுளை, தர்பூசணி, வெள்ளரி, கேரட் உள்ளிட்டவைகளை நறுக்கி, ஒன்றாக கலந்து, 'புருட் சாலட்'டாக சாப்பிடலாம்.

பிராய்லர் சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் அதனை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பதிலாக மீன் சாப்பிடலாம்.