மழைக்காலம், பனிக்காலத்தில் வேண்டும் நிறைய கவனம்

வயதான காலத்தில் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மழைக்காலங்களில் எளிதாக தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், முதியோர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக மழைக்காலத்தில் வயதானவர்கள் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், வைரஸ் பாதிப்பு, செரிமான பிரச்னைகள், மூட்டு வலி, சோர்வு போன்ற பாதிப்புக்கு எளிதாக ஆளாகின்றனர்.

எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் தாகமின்மை காரணமாக பலரும் தண்ணீர் அருந்ததால், உடலில் நீர்ச்சத்து குறைந்து பாதிப்பு உண்டாவதால், தாகம் இல்லாவிட்டாலும், காய்ச்சிய தண்ணீரை பருக வேண்டும்.

வீடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்காத வகையில், சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியால் டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

ஈரப்பதம் அதிகமான காலை நேரத்தில், வெளியே செல்லக்கூடாது. நெஞ்சு பகுதி, காதுகள் நன்கு மூடியிருக்க வேண்டும். குளிர் காற்று நெஞ்சில் படுவதால் ரத்த ஓட்டத்தில் சீரற்ற தன்மை ஏற்படும்.

பேனுக்கு அடியிலும், ஏ.சி.,க்கு நேராகவும் அமர்வதையும், உறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் உரிய மருந்துகளை, மருத்துவர்கள் அறிவுரைப்படி தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் வழுக்கி விழும் முதியவர்கள் அதிகம். எனவே, வீட்டின் உள்ளும், வெளியிலும் ஈரமான இடங்களில் கவனமாக நடக்க வேண்டும்.

பனி சற்று அதிகமாக இருந்தால், உடற்பயிற்சிக்கு வெளியில் செல்லாமல், வீட்டில் உள்ளேயே முடிந்தளவு, உடல் இயக்க பயிற்சி மேற்கொள்ளலாம்.