டேஸ்டியான பாகற்காய் ஃபிரை... குட்டீஸ்கள் விரும்பிச் சாப்பிடுவர் !

கசப்பான பாகற்காய் என்றாலே குட்டீஸ்கள் மட்டுமின்றி பெரியவர்கள் பலரும் சாப்பிடத் தயங்குவர். ஆனால், பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது.

ஆரோக்கியமான உணவை டேஸ்டியாக செய்யும் போது பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் ஆர்வமுடன் சாப்பிடுவர். எனவே, டேஸ்டியான பாகற்காய் ஃபிரை செய்யும் வழிமுறையை பார்க்கலாம்.

1/4 கிலோ பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இளம் பாகற்காய் என்றால் விதைகளை நீக்க வேண்டிய அவசியமில்லை.

இதிலுள்ள கசப்புத் தன்மையை நீக்குவதற்காக ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சளை சேர்த்து கலக்கி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர், பாகற்காயை நன்றாகத் தண்ணீரில் கழுவவும்.

பாகற்காயுடன் தனி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு தலா 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை; அவசியமென்றால் சிறிதளவு தெளிக்கவும். இந்த கலவையை நன்றாக பிசறி விட்டு அரை மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மசாலாவில் ஊறிய பாகற்காய்களை சிறிது சிறிதாகப் போட்டு, பொன்னிறமாக முறுகலாக பொரித்தெடுக்கவும்.

இல்லாவிட்டால், சிறிதளவு எண்ணெயை ஊற்றி அடுப்பை குறைவான தணலில் வைத்து நன்றாக வேக விடும்போது முறுகலாக வரக்கூடும்.