70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 'ஆயுஷ்மான்' பாரத் திட்டத்தில் காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால், 6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும்.
சமூக, பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், இத்திட்டத்தின் பலன்களை பெறுவர்.
தகுதியான மூத்த குடிமக்களுக்கு புதிய தனித்துவமான ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.
ஏற்கனவே, இத்திட்டத்தில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், தங்களுக்கென தனியாக, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, கூடுதலாக பெறுவர்.
மத்திய அரசின் பிற சுகாதாரத் திட்டங்களில் பலன்களை பெறும் மூத்த குடிமக்கள், ஏற்கனவே உள்ள திட்டத்தில் தொடரலாம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையலாம்.