இன்று உலக ரத்த தான தினம்

ஒரு மனிதனின் உயிரைக் காக்கும் உன்னத பணியைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 14ல், உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

ஏ, பி, ஓ மற்றும் ஏபி போன்ற ரத்த வகைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் பிறந்த நாளை முன்னிட்டு, இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'மனிதநேயத்தின் ஒரு துளி: ரத்தம் வழங்குவோம். உயிர்களை காப்போம்' என்பது இந்தாண்டின் மையக்கருத்து.

நல்ல உடல்நிலையில் உள்ள 18 - 65 வயதுடைய எவரும் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும்.

மிகவும் அதிகமாக கிடைப்பது ஓ பாசிடிவ் ரத்தவகை, அடுத்ததாக பி பாசிடிவ், ஏ பாசிடிவ் ரத்தம் கிடைக்கிறது. ஆனால் ஏபி நெகடிவ், பாம்பே ஓ குரூப் ரத்தவகை மிகவும் அரிதாக தான் கிடைக்கும்.

ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின் ரத்த தானம் செய்ய வேண்டும்.

ரத்தம் கொடுத்த 24 மணி நேரத்தில் 350 மில்லி அளவு நீர்ச்சத்து (பிளாஸ்மா) உடனடியாக உடலில் உற்பத்தியாகிவிடும்.

2 நாட்களில் வெள்ளைரத்த அணுக்களும் 8 வாரத்தில் சிவப்பு ரத்த அணுக்களும் உற்பத்தியாகி அதே அளவு ரத்தத்தை ஈடுகட்டிவிடும்.

50 முதல் 55 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான மனிதர் 350 மில்லி, அதற்கு மேல் எடையுள்ளவர்கள் 450 மில்லி ரத்தம் தானமாக தரலாம்.

ரத்த புற்றுநோய், நீரிழிவு நோய், கரோனரி தமனி நோய் , எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி அல்லது சி, காய்ச்சல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.