மருத்துவ குணம் கொண்ட மலர் செண்பகமே.. செண்பகமே...

அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர்.

இதன் விதை, வேர் பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக், பால்மிடிக் போன்ற பொருட்கள் இருக்கின்றன.

உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.

செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.

செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, மூட்டு வாதத்தை குணமாக்கும்.

இதில் கஷாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால், கண் பார்வை தெளிவு பெறும்.

செண்பக மரப்பட்டை, வேப்ப மரப்பட்டை சம அளவு எடுத்து, இடித்து, நான்கு மடங்கு நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை என, இரண்டு வேளை குடித்து வர, குளிர் காய்ச்சல் நீங்கும்.

செண்பகப் பூவை கஷாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.