மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?

மைக்ரேன் பாதிப்பு என்பது ஒற்றைத் தலைவலி ஆகும். இது புருவத்திற்கு மேல் வலி தெரியும். வாந்தி உணர்வு, குமட்டல், கண்கள் மறைப்பது போன்ற உணர்வு, கண்களில் பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கலாம்.

இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் வலிக்கும். அல்லது இரண்டு பக்கமும் வரலாம்; மெதுவாக அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் தலையில் யாரோ இடிப்பது போன்ற தீவிரமான வலியாக மாறும்.

வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. சத்தத்தைக் கேட்க முடியாது. இது 2 மணி நேரம் வரை இருக்கும். அதைத்தொடர்ந்து 2 முதல் 3 நாள் வரை நீடிக்கலாம்.

இது பொதுவாக, தூக்கமின்மை, க்ளைமேட் சேஞ்ச், மன அழுத்தம், வேலை பளு, குளிர்ந்த பொருளை உண்ணுவது போன்ற நேரங்களில் ஏற்படுகிறது. அதைக் கண்டுபிடித்து சரி செய்தாலே ஓரளவு தீர்வு காணலாம்.

அதுபோன்று மூளையில் சுரக்கும் சில கெமிக்கல்கள் அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ ரத்தக்குழாய்கள் சுருங்குவதோ அல்லது விரிவடைந்தாலோ இப்படிப்பட்ட தலைவலி ஏற்படும்.

முதலில் தூக்கமின்மை, உணவு ஒவ்வாமை அல்லது வாசனை திரவியங்களால் வருகிறதா, வேலைப் பளுவினாலா, மன அழுத்தமா என எப்போது தலைவலி வருகிறது என கண்டுபிடிக்க வேண்டும்.

பின், எந்த நேரத்தில் வருகிறது. எவ்வளவு நேரம் உள்ளது, வலி எப்படி உணர்கிறார்கள் என்பதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.

இதற்கான சிகிச்சையில், 'ப்ரிவென்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்' என்பது அடிக்கடி தலைவலி வராமல் தடுப்பது. 3 முதல் 6 மாதங்களுக்கு மருந்துகளை எடுக்க வேண்டும். வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்.

'அபார்ட்டிவ் மைக்ரேன் ட்ரீட்மென்ட்ஸ்' என்பது ஒருமுறை தலைவலி வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான தீர்வளிக்கும். வலி வந்த 30 - 45 நிமிடங்களுக்குள் மாத்திரைகளை எடுத்தாலே பலன் தெரியும்.

பிறப்பு மூலமாக ஒருவருக்கு மைக்ரேன் வந்தால், அதை தடுக்க முடியாது. ஆனால், அதை அதிகமாகாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு, டென்ஷன், கோபம், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சூடான நீரை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, ரிலாக்ஸ்ஷேன் தெரபி, மைக்ரேன் டைரி மெயின்டன் செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும்.