PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

காற்றாலை மின்சாரத் தயாரிப்பு என்பது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதது தான். என்றாலும் காற்றாலை விசிறிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை அல்ல. ராட்சத விசிறிகள் சேதமடைந்துவிட்டால் பெரும்பாலும் நிலங்களில் புதைக்கப்பட்டு சூழலை மாசாக்குகின்றன. இவற்றில் கார்பன் நார்களும், ஃபைபர் கண்ணாடியும் பயன்படுகின்றன. இவற்றை இணைக்க ஈபாக்ஸி பிசின் உபயோகப்படுகிறது.
20 ஆண்டுகள் வேலை செய்து சேதமடைந்த விசிறியின் இறக்கையிலிருந்து மேற்கண்ட பொருட்களைப் பிரித்தெடுப்பது என்பது சுலபமானதல்ல. அப்படியே பிரித்தெடுத்தாலும் எடுக்கப்பட்ட கார்பன் நார்கள் மறுபயன்பாட்டிற்கு உதவாது. இதைச் சரிசெய்ய அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஈஎல் (NREL) ஆய்வகம் ஒரு புதிய பிசினை உருவாக்கியுள்ளது. இதன் பெயர் பெகான் (PECAN).
உண்ணப்படாத சர்க்கரை, வீணாக்கப்பட க்ளிசரால் ஆகிய வற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பெகான் பிசின் எந்த வகையிலும் இயற்கை, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காதது. இதைக் கொண்டு 29.5 அடி நீளமுள்ள இறக்கையைச் செய்து சோதித்துப் பார்த்தனர். பழைய இறக்கைகள் போலவே இதுவும் நல்ல வலிமை கொண்டிருந்தது. கடுமையான தட்பவெப்ப சூழலையும் தாக்குப் பிடித்தது.
இதன் பிறகு இறக்கையை வெட்டிச் சில வேதி வினைகளுக்கு உட்படுத்தினர். இதில் பயன்பட்ட கார்பன் நார்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் சேதமின்றிப் பிரித்தெடுக்கப்பட்டன. அவை மறுபயன்பாட்டிற்கு உரிய தரத்துடன் இருந்தன. இந்தப் புதிய பிசினை இனி காற்றாலைகளில் பயன்படுத்துவதன் வாயிலாக சுற்றுச்சூழலைக் காக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.