PUBLISHED ON : மே 21, 2026 07:08 AM

டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள், தாவரங்களின் இலைகளில் நேரடியாக ஒட்டக்கூடிய மிக மெல்லிய கிராபீன் பட்டை உணரிகளை உருவாக்கியுள்ளனர். இலைகளை வெட்டாமல், அவற்றின் நீர்ச்சத்து அளவை இத்தொழில்நுட்பம் உடனுக்குடன் கண்காணிக்கும். இது, வறட்சியை முன்கூட்டியே கண்டறிந்து விரைந்து செயல்படுவதற்கு விவசாயிகள் மற்றும் வன மேலாளர்களுக்கு உதவும்.
இந்த கிராபீன் ஸ்டிக்கர் உணரிகள் உண்மையில் சிறிய மின்னணு சாதனங்கள் போலச் செயல்படுகின்றன. இலையின் வழியே சிறிய மின் துாண்டல்களை அனுப்பி, தாவர திசுக்களுக்குள் அயனிகள் நகர்வதை வைத்து ஈரப்பத மாற்றங்களை இவை கண்டறிகின்றன. இது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கையையோ அல்லது இலை வளர்ச்சியையோ எந்த விதத்திலும் பாதிக்காது.
இந்த உணரிகள், மின் சமிக்ஞைகளைத் தற்காலிகமாக, 'நினைவில்' வைத்துக்கொள்ளும் திறன் கொண்டதோடு, தாவரங்களின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வல்லுநர்களுக்கு அனுப்பும் திறனையும் கொண்டுள்ளன. இதன் வாயிலாக தாவரங்களின் ஆரோக்கியத்தை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.
வருங்காலத்தில் பரந்த வனப்பகுதியில் உள்ள தாவரங்களுக்கும், பெரிய பண்ணைகளின் பயிர்களுக்கும் இந்த புதிய ஸ்டிக்கர் உணரிகள் பதிக்கப்படலாம் என்கின்றனர் வல்லுநர்கள். இலைகள் மற்றும் மண்ணில் பதிக்கப்பட்ட இத்தகைய, 'ஸ்மார்ட் சென்சார்கள்' தாவரங்கள் மற்றும் வேர்கள், மண் வளம் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும். காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் சூழலில், காட்டுத்தீ அபாயங்கள் மற்றும் வறட்சி குறித்து நேரடி எச்சரிக்கைகளை வழங்கி இயற்கை வளங்களைக் காக்கவும் இந்த நுட்பம் உதவும்.
